;
Athirady Tamil News

காங்கோவில் 413 பேரைக் கொன்ற ருவாண்டா ஆதரவு ஆயுதக்குழு!

0

ஆப்பிரிக்க நாடான காங்கோவில், ருவாண்டா அரசின் ஆதரவு பெற்ற எம்23 ஆயுதக்குழுவினரால் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோவின், சௌத் கிவு மாகாணத்தில் உவிரா மற்றும் புகாவு ஆகிய நகரங்களுக்கு இடையில், எம்23 ஆயுதக்குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக, அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கிழக்கு காங்கோவில் உள்ள உவிரா நகரத்தை எம் 23 ஆயுதப்படையினர் கைப்பற்றியுள்ளதாக, கடந்த டிச.10 ஆம் தேதி அறிவித்துள்ளனர். இதுகுறித்து, எம் 23 படையினர் வெளியிட்ட அறிக்கையில், அப்பகுதியிலிருந்து வெளியேறிய உள்ளூர்வாசிகள் தங்களது வீடுகளுக்குத் திரும்புமாறு ஊக்குவித்திருந்தனர்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில், கடந்த வாரம் வாஷிங்டனில் காங்கோ மற்றும் ருவாண்டா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் எம்23 கிளர்ச்சிப்படைகள் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ருவாண்டாவின் ஆதரவில் செயல்படும் கிளர்ச்சிப்படையாக அறியப்படும் எம்23 படைகள் மீண்டும் தங்களது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.