நாட்டில் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சி ; கொட்டி தீர்க்க போகும் கனமழை
வளிமண்டலத்தின் கிழக்கு பகுதியில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.