எச்சரிக்கையை மீறி தாளையடி ஆழ்கடலுக்குள் நீராடும் சுற்றுலாப் பயணிகள்
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, கடலின் ஆழமான பகுதிக்குள் நீராடுவதாக வடமராட்சி, கிழக்கு பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலா வாசிகள் மது போதையில் கடலின் ஆழமான பகுதிக்குள் சென்று நீராடி புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதனை அவதானித்த ஊர் மக்கள் கடலின் தன்மை தொடர்பாக அவர்களுக்கு கூறிய போதும் அதனை செவிமடுக்காமல் நீராடியுள்ளனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அறிவித்த போது அவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடலுக்குள் இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளிடம் கூறிச் சென்றார்.
தற்போது வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் தாளையடி கடற்கரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.