நேருக்கு நேர் மோதிய இரு கார்கள் ; கோர விபத்தில் ஐவர் காயம்
அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
அநுராதபுரம் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் நால்வர் பயணித்த காரும், களனியிலிருந்து அநுராதபுரத்திற்கு வழிபாட்டிற்காகச் ஒரே குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்து இடம்பெற்ற இடம் வளைவான பகுதி என்பதால், அநுராதபுரத்திலிருந்து வந்த கார் வேகக் கட்டுப்பாட்டு இழந்து, வீதியின் வலது பக்கமாகச் சென்று மற்றைய காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் அநுராதபுரத்திலிருந்து பயணித்த காரின் சாரதி உட்பட அதில் பயணித்த நால்வரும், மற்றைய காரில் பயணித்த ஒருவரும் அடங்கலாக 5 பேர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினால் இரண்டு கார்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.