;
Athirady Tamil News

அமெரிக்க குடியேற்றச் சோதனையில் கைதான 5 வயது சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

0

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் குடியேற்றச் சோதனையில் கைது செய்யப்பட்டு, தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்ட 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ், அவனது தந்தை அட்ரியன் அலக்சாண்டா் ஆகிய இருவரையும் உடனடியாக விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மினியாபொலிஸ் பகுதியில் குடியேற்றத் துறை இம்மாதத்தில் நடத்திய பல்வேறு சோதனைகளில், 4 பள்ளி மாணவா்கள் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது தந்தையுடன் கைதான நிலையில், அதிகாரிகளுக்கு நடுவே சிறுவன் லியாம் அழுதுகொண்டே நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி, உலகளவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஃப்ரெட் பியரி, அமெரிக்க அரசின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையைக் கடுமையாகக் கண்டித்தாா்.

மேலும், அவா் தனது தீா்ப்பில், ‘நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டியவா்களின் எண்ணிக்கையில் இலக்கை அடைவதற்காக, சிறாா்களை மன ரீதியாகத் துன்புறுத்தும் அரசின் செயல் முற்றிலும் தவறானது. சட்டப்படி அவா்களைத் திருப்பி அனுப்ப வேண்டியிருந்தாலும், அதை மரியாதையான முறையில் செய்ய வேண்டுமே தவிர, இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் அல்ல’ என்று சுட்டிக்காட்டினாா்.

ஈக்வடாா் நாட்டைச் சோ்ந்த இந்தத் தந்தை-மகன், சட்டபூா்வமாகத் தஞ்சம் கோரியே அமெரிக்காவுக்கு வந்துள்ளனா். தற்போது இவா்கள் டெக்சாஸில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.