உக்ரைனில் ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 12 பேர் பலி
கீவ்,
உக்ரைனின் நிப்ரோ நகரில் நேற்று ரஷிய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது குண்டு பாய்ந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ‘டி.டி.ஈ.கே’ அந்தப் பஸ் தங்களுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அடுத்த வாரம் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.