;
Athirady Tamil News

உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்: பேச்சுவார்த்தைக்கு முன் பதற்றம்

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை (பிப். 4) முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில், உக்ரைன் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே இரவில் சுமார் 450 ட்ரோன்கள், 70 ஏவுகணைகளை ஏவி ரஷியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.

தலைநகர் கீவ் உள்பட 5 முக்கியப் பிராந்தியங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் காயமடைந்தனர். குறிப்பாக, மின் கட்டமைப்புகள் மோசமாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

உக்ரைனில் இப்போது கடும் குளிர் நிலவும் சூழலில், மக்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், வெப்பமூட்டும் வசதிகளைப் பறிக்கும் நோக்கில் ரஷியா திட்டமிட்டுத் தாக்கியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. கீவ் நகரில் மட்டும் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெப்பமூட்டும் வசதி துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் குளிரில் வாடி வருகின்றனர்.

கடந்த 2022-இல் தொடங்கிய இந்தப் போர் 4 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முன்னெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு 2-ஆம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், “பேச்சுவார்த்தையைவிட மக்களைத் துன்புறுத்துவதிலேயே ரஷியா அதிக ஆர்வம் காட்டுகிறது’ என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி சாடியுள்ளார். மேலும், ரஷியாவுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், தற்காப்புக்காக உக்ரைனுக்குக் கூடுதல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஓராண்டாகப் பல்வேறு கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அவை முன்னேற்றமடைந்து வருவதாக அதிகாரிகள் கூறினாலும், ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பது மற்றும் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது போன்ற முக்கிய விஷயங்களில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.