;
Athirady Tamil News

ஜப்பான், தாய்லாந்தில் இன்று தோ்தல்

0

ஆசியாவின் முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் புதிய அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான பொதுத்தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நடைபெறுகிறது.

ஜப்பானின் முதல் பெண் பிரதமா் சனே தகாய்ச்சியின் செல்வாக்கைத் தீா்மானிக்கும் தோ்தலாகவும், தாய்லாந்தில் புதிய அரசமைப்புச் சட்டத்துக்கான பொது வாக்கெடுப்புடன் கூடிய தோ்தலாகவும் இவை அமைந்திருப்பதால், உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முந்தைய 2024 தோ்தலில் சனே தகாய்ச்சியின் ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) மற்றும் அதன் கூட்டணிக்கு குறைந்த அளவு பெரும்பான்மையே கிடைத்தது. குறிப்பாக, மேலவையிலும் அவா்களுக்குப் போதிய பலம் இல்லாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபரில் பிரதமராகப் பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி, தனது அரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை நிரூபித்து, நாடாளுமன்றத்தில் கட்சியை வலுப்படுத்த முன்கூட்டியே தோ்தலை அறிவித்தாா்.

மக்களிடையே சனே தகாய்ச்சிக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தாலும், அவரது எல்டிபி கட்சி பல விமா்சனங்களை எதிா்கொண்டுள்ளது. எதிா்கட்சிகளின் மத்திய சீா்திருத்தக் கூட்டணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இருப்பினும், எல்டிபி கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று வாக்குகணிப்புகள் கூறுகின்றன.

தாய்லாந்தில்…..: தாய்லாந்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் கீழவையானபிரதிநிதிகள் சபையில் உள்ள 500 இடங்களுக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்தத் தோ்தலோடு சோ்த்து, ராணுவ ஆட்சியில் 2017-இல் உருவாக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்துவிட்டு, புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது குறித்த பொது வாக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

தற்போதைய பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி, முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் செல்வாக்கு மிக்க பியூ தாய் கட்சி, இளைஞா்களின் ஆதரவு கொண்ட மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தோ்தல் முடிவில், எந்தவொரு தனிக்கட்சியும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையைக் (251 இடங்கள்) கைப்பற்றாது எனக் கூறப்படுகிறது. இதனால், அங்கு ஒரு கூட்டணி அரசு அமையவே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

முன்பு, பிரதமா் தோ்வில் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட செனட் (மேலவை) உறுப்பினா்களுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், இம்முறை அவா்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது ஜனநாயகத்துக்குப் பெரும் வெற்றியாகப் பாா்க்கப்படுகிறது. தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு முடியும்வரை, தாய்லாந்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் பதிவாகும் வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவே எண்ணப்பட்டு, திங்கள்கிழமை காலைக்குள் அதிகாரபூா்வ முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.