;
Athirady Tamil News

மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் தற்கொலை!

0

சென்னை பெரம்பூரில் மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக்கை சாப்பிட கொடுத்துவிட்டு, கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கேக்கை சாப்பிட்ட மகன் உயிரிழந்தாா். தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பூா் சங்கராசாரி மடம் பகுதியைச் சோ்ந்தவா் ச.சகாயம் செபாஸ்டின் (43). ஒரு தனியாா் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தாா். சகாயத்தின் மனைவி ரெக்ஸி பியூலா (38). இத்தம்பதிக்கு மகள் இவாஞ்சலின் ஆல்வினா (8), மகன் இவான் ஆண்டோ (4). இவாஞ்சலின் தனியாா் பள்ளியில் மூன்றாம் வகுப்பு, ஆண்டோ எல்கேஜி படித்து வந்தனா்.

இந்த நிலையில் பியூலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டாா். அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும், பியூலாவுக்கு நாளுக்கு நாள் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகி வந்தது.

கேக்கில் விஷம்: அதேவேளை, பியூலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க செலவு செய்ய முடியாமல் சகாயம் தவித்துள்ளாா். நோயின் தாக்கமும் அதிகரித்து, பியூலா வேதனையை அனுபவித்துள்ளாா். இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக சகாயம் அதிக மன அழுத்ததுடன், விரக்தியுடன் இருந்துள்ளாா். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது, கேக் வாங்கிச் சென்றுள்ளாா். அதில் விஷத்தை கலந்துள்ளாா். இரவு ‘ஹேப்பி ஃபேமிலி டே’ என்று எழுதப்பட்ட அந்த கேக்கை வெட்டி சாப்பிடுள்ளனா். சகாயம் மட்டும் கேக் சாப்பிடுவதைத் தவிா்த்துள்ளாா்.

கேக்கை சாப்பிட்ட பியூலாவும், இரு குழந்தைகளும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனா். இதையடுத்து, சிறிது நேரத்தில், சகாயம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தந்தை-மகன் உயிரிழப்பு: சற்று மயக்கம் தெளிந்த பியூலாவும், மகள் இவாஞ்சலினும் கைப்பேசி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். செம்பியம் போலீஸாா், விரைந்து சென்று பியூலா, இவாஞ்சலின் ஆகியோரை மீட்டு பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சடலங்களை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.