தவளை விஷத்தால் கொல்லப்பட்ட நவால்னி- ரஷ்யாவிற்கு எதிராக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கடுமையாக போராடிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, 2024-ஆம் ஆண்டு ஆர்க்டிக் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இப்போது, அவரது மரணம், ஈட்டி தவளையில் இருந்து (Dart Frog) தயாரிக்கப்படும் “எபிபாட்டிடின்” (Epibatidine) என்ற கொடிய நஞ்சால் ஏற்பட்டுள்ளது என்பது அறிவியல் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவே இந்த நஞ்சை பயன்படுத்தியது. நவால்னி அரசியல் எதிர்ப்பாளராக இருந்ததால் அவரை அழிக்க ரஷ்யாவுக்கு காரணமும், வாய்ப்பும் இருந்தது” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் செயல் “Chemical Weapons Convention” உடன்பாட்டை மீறுவதாகக் கூறி, “Organization for the Prohibition of Chemical Weapons” (OPCW) அமைப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர், “நவால்னி ரஷ்ய அரசுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். அவரை அழிக்க ரஷ்யா இத்தகைய கொடிய நஞ்சை பயன்படுத்தியுள்ளது, அரசியல் எதிர்ப்ப்புகளுக்கு எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதற்கான சான்று” என்று தெரிவித்தார்.
நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா, “இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் கணவரை புடின் கொன்றார் என்று சொன்னேன். அப்போது அது என் நம்பிக்கை மட்டுமே. ஆனால் இன்று அது அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட உண்மை” என்று மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உருக்கமாகக் கூறியுள்ளார்.
நவால்னி, ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணி வகித்தவர். 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த அவர், 2024 பிப்ரவரியில் சிறையில் உயிரிழந்தார். ரஷ்ய அரசு “இயற்கை காரணங்களால் இறந்தார்” என்று கூறினாலும், மேற்கத்திய நாடுகள் மற்றும் அவரது குடும்பம் இதை “கொலை” என உறுதியாகக் கூறுகின்றன.