யாத்திரைக்காக சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் ; 10 வயது சிறுவன் படுகாயம்
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கொடகவெல, மல்வத்த பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ பாத யாத்திரைக்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், கதிர்காமம் கோயிலில் வழிபாடு நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதி கைது
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக கொடகவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியின்சாரதி, அதில் பயணித்த பத்து வயது சிறுவன் மற்றும் மற்றொருவருக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கொடகவெல பொலஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.