;
Athirady Tamil News

ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு

0

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் மீது நேற்று ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர்.

இதில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தனர்.

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் ஈரான் வெளியிடாத நிலையில், உச்ச தலைவர் அலி காமெனி உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது தொடர்பான ஊகங்கள் பல மணி நேரங்களாக நீடித்து வந்தது.

உறுதிப்படுத்திய ஈரான் அரசு ஊடகம்
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக ஈரானின் அரசு ஊடகமான IRIB ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் உச்ச தலைவர் அவருடைய அலுவலகத்தில் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு இருந்த போது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியுடன் சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்களான அவரது மகள், மருமகன், பேத்தி என அனைவரும் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அலி காமெனி மறைவை ஒட்டி ஈரான் நாடு முழுவதும் 40 நாட்கள் தேசிய துக்க தினத்தை ஈரான் அரசு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.