O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.!-கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்
தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்
O/L எழுதிய மாணவர்களுக்கான A/L வகுப்புகள் 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.!
-கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்.
பாறுக் ஷிஹான்
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்முனையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பெற்றோர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த மாணவர்களின் நலன் கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிந்த கையோடு உடனடியாகவே க.பொ.த. உயர் தரத்திற்கான புதிய வகுப்புகளை ஆரம்பிக்க சில தனியார் கல்வி நிலையங்கள் ஏட்டிக்குப் போட்டியாக முனைவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இது விடயமாக ஏலவே சொல்லப்பட்ட ஆலோசனைகளை குறித்த கல்வி நிலையங்கள் பொருட்படுத்தாமல், உதாசீனமாக செயற்படுவதானது கவலைக்குரிய விடயமாகும்.
ஆகையினால் இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபையானது இவ்வறிவுறுத்தலை விடுப்பதுடன் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது- என்று ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
