யாழில் பெரும் துயரம்; அந்தோனியாரை தரிசிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் பயணம்
படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், படகு விபத்தால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
மருத்துவமனையில் மூன்று பேருக்கு செயற்கை சுவாசம்
நீரில் மூழ்கியவர்களில் 04 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மற்றையவர் சாதாரண விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பாலைதீவுக்கு இன்று முற்பகல் பயணித்த, பயணிகள் படகொன்று விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேநேரம், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.