ஈரான் கப்பலில் மீட்கப்பட்டவர்களுக்கு இலவச விசா
இலங்கை கடலில் ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமானப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட விதிகளைப் பின்பற்றி, அணிசேரா கொள்கையின் அடிப்படையில் ஈரான் மாலுமிகள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தீர்மானங்கள் மூலம் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதோ அல்லது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோ அரசாங்கத்தின் நோக்கமல்ல என அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் போர்ச் சூழல்கள் நிலவினாலும், அதன் மறைமுகத் தாக்கங்களுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பிற்கே அரசாங்கம் முதலிடம் வழங்கும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.