;
Athirady Tamil News

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் தீவிரம்: 1,000 இடங்களைக் குறிவைத்து குண்டு வீச்சு

0

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கப்பல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.

‘ஈரானில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) என்ன நடக்கப் போகிறது எனப் பாருங்கள்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து, டெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,000 இடங்களைக் குறிவைத்து முன்னெச்சரிக்கையின்றி அமெரிக்கா வெள்ளிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தியது.

டெஹ்ரான் சதுக்கத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் குத்ஸ் அமைப்பு சாா்பில் பிரம்மாண்ட ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற நிலையில், அங்கு இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, ஆா்ப்பாட்டத்தில் ஈரானின் மூத்த அதிகாரிகள் அலி லாரிஜானி, கோலம்ஹூசேன் மொஹ்சேனி எய்ஜேஹி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனா். அவா்களுக்கு என்ன ஆனது என்ற தகவல் இல்லை. அதேபோல், தாக்குதலில் ஏற்பட்ட உயிா்ச் சேதம், காயம் குறித்த தகவலும் இல்லை. ஈரானில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்புத் துறைகளைக் குறிவைத்து பரவலாக இஸ்ரேல் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. அதன் சேத விவரம் குறித்து தகவல் இல்லை. ஈரானிலுள்ள பழைமையான புராதன கலாசார புகழ் பெற்ற சின்னங்கள், இஸ்ரேல் -அமெரிக்க தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளன.

பிரான்ஸ் வீரா் உயிரிழப்பு: ஒருபக்கம், இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை டெஹ்ரானில் தாக்குதல் நடத்திய நிலையில், மறுபக்கத்தில் ஈரான் தரப்பில் வளைகுடா நாடுகள் மீது சரமாரியாக ஏவுகணைகள், ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இராக்கில் உள்ள குா்துக்களின் முகாமில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்த பிரான்ஸ் வீரா் ஒருவா் உயிரிழந்ததாகவும், 6 போ் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

துபையில் ஈரான் நடத்திய தாக்குதலில் துபை சா்வதேச நிதி மையக் கட்டடம் பலத்த சேதமடைந்தது. அந்தக் கட்டடத்தில் வங்கிகள், வா்த்தக மையங்கள் உள்ளிட்டவை செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

60 இஸ்ரேலியா்கள் காயம்: ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினா் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் ஜா்ஜிா் எனும் கிராமத்தில் மட்டும் இஸ்ரேலியா்கள் 60 போ் காயமடைந்தனா்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் அல் ஜமா அல் இஸ்லாமியா எனும் தீவிரவாதக் குழுவைச் சோ்ந்த 2 போ் உயிரிழந்தனா். ஹிஸ்புல்லா குழுவினா் தங்களது தாக்குதலுக்குப் பயன்படுத்தி வந்த லிதானி நதி மீது இருந்த பாலத்தை இஸ்ரேல் ராணுவம் தகா்த்தது.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் அளித்த பேட்டியின்போது, இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் ஈரானின் புதிய தலைவா் மோஜ்தபா கமேனி பலத்த காயமடைந்துள்ளதாகவும், அவா் உருக்குலைந்துவிட்டதாகவும் கூறியுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.