;
Athirady Tamil News

தோட்ட உதவி முகாமையாளர் மீது மாட்டு சாணத்தால் தாக்குதல்

0

கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள மேபீல்ட் (Mayfield) தோட்டத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 1000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் தோட்ட உதவி முகாமையாளர் மாட்டு சாணத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

மேபீல்ட் தோட்ட தொழிலாளர்களை அடிமைத்தனமாக நடத்துவதாகவும், தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயற்படுவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காவலாளி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
அத்துடன் திங்கட்கிழமை (20) அன்று குறித்த தோட்டத்தில் பணியாற்றி வரும் காவலாளி தாக்கப்பட்டு கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவலாளி தாக்கப்பட்டமை குறித்து செவ்வாய்க்கிழமை (21) காலை தோட்ட பிரட்டுக் களத்தில் (Mustering ground) வைத்து தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளர் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளுக்கு இடையே கடுமையான தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்தவர்களால் மாட்டு சாணத்தால் குறித்த உதவி முகாமையாளர் தாக்கப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தையடுத்து, மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள் உடனடியாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட தோட்ட முகாமையாளர்,உதவி முகாமையாளர் மற்றும் மேற்பார்வை அதிகாரி ஆகியோரை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தோட்ட பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.