மகனுக்கு புற்றுநோய் – நிதி திரட்டிய தாய்க்கு 4 ஆண்டுகள் சிறை… ஏன்?
மெல்போர்ன்,
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகத் தனது 6 வயது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் கூறி பொதுமக்களிடம் நிதி வசூலித்த ஆஸ்திரேலியத் தாய்க்கு அந்நாட்டு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தனது மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்களிடம் பெருமளவு நிதியைத் திரட்டியுள்ளார். மக்கள் அவனை நோயாளி என்று நம்புவதற்காக அவர் செய்த செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிறுவனின் தலைமுடி மற்றும் புருவங்களைச் சிரைத்து அவனைப் புற்றுநோயாளியைப் போல மாற்றியுள்ளார். உடலில் ஆங்காங்கே கட்டுகளைப் போட்டு, அவனை எப்போதும் சக்கர நாற்காலியில் அமர வைத்துள்ளார்.
வசூலித்த பணத்தை மகனின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்தாமல், தனது ஆடம்பரத் தேவைகளுக்காகச் செலவிட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் சிறுவனுக்குப் புற்றுநோய் இல்லை என்பதும், அந்தத் தாய் பணத்திற்காகத் திட்டமிட்டு நாடகமாடியதும் உறுதியானது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு நீதிபதி, தாயின் இந்தச் செயல் மிகவும் கொடூரமானது என்றும், இரக்கமற்ற முறையில் குழந்தையைப் பயன்படுத்தியதற்காகவும் அவருக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.