பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம்- நாவிதன்வெளி பிரதேச சபையின் அதிரடித் தீர்மானம்
நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிபுணர்களுக்கும் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (7) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதானமாக பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கார நடைமுறைகள் மற்றும் சேவைக் கட்டணக் கட்டுப்பாடு ஆகிய இரு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சினிமா பாணி அலங்காரங்களுக்கு தடை
தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் சினிமா நடிகர்களைப் பின்பற்றி விசித்திரமான முறையில் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக தவிசாளர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சிகை அலங்காரங்கள் மாணவர்களிடையே ஒழுக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒருவிதமான பாகுபாட்டையும், தேவையற்ற போட்டிகளையும் உருவாக்குவதாக அவர் கவலை வெளியிட்டார்.
இக்கலந்துரையாடலின் போது சிகை அலங்கார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:
சில பெற்றோர்களே நேரடியாகத் தலையிட்டுத் தங்கள் பிள்ளைகளுக்கு தலையில் கோடுகள் இடுவதற்கும், வர்ணம் பூசுவதற்கும், நவீன டிசைன்களைச் செய்வதற்கும் வற்புறுத்துகின்றனர்.ஆனால், ஏனைய சமூகங்களைச் சேர்ந்த (சிங்கள) உயர்தர மாணவர்கள் கூட பாடசாலை விதிமுறைகளை மதித்து முறையாக முடி வெட்டுவதாகவும், எமது சமூக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் இச்செயற்பாடு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தவிசாளர், இனிவரும் காலங்களில் பாடசாலை மாணவர்கள் எவராவது சினிமா பாணியில் அல்லது நாகரீகமற்ற முறையில் சிகை அலங்காரம் செய்ய முன்வந்தால் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.அவ்வாறு சிகை அலங்காரம் செய்ய விரும்பும் பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து உரிய சம்மதக் கடிதம் பெறப்பட வேண்டும்.அக் கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவனின் பாடசாலைக்கு அறிவிக்கப்பட்டு, உரிய பெற்றோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இவ்விடயம் தொடர்பாக சிகையலங்கார நிபுணர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், மாணவர் சமூகத்தின் ஒழுக்கத்தை மேம்படுத்த சபை என்றும் முன்னிற்கும் எனவும் தவிசாளர் இதன்போது உறுதியளித்தார்.
