புடினை சந்திக்கச் செல்பவர்கள் கைக்கடிகாரம் அணியக்கூடாது: புதிய கட்டுப்பாடு
புடினை சந்திக்கச் செல்லும் அவரது அலுவலர்கள் கைக்கடிகாரம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு ஆதாரமாக, அவரை சந்திக்கச் சென்றவர்கள், கைகளில் கைக்கடிகாரம் இல்லாமல் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
காரணம் என்ன?
சமீபத்தில், ஐரோப்பிய நாடொன்றின் உளவுத்துறை, புடினுடைய ஆட்சி அவரது நாட்டு செல்வந்தர்களாலேயே கவிழ்க்கப்படலாம் என்று தகவல் கொடுத்துள்ளதாம்.
அதைத் தொடர்ந்து, தனக்கு நெருக்கமானவர்களாலேயே தான் கொல்லப்படலாம் என்ற அச்சம் புடினுக்கு உருவாகியுள்ளதாம்.
ஆக, ஏற்கனவே புடினைக் காணச் செல்பவர்கள் மொபைல் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரைக் காணச் செல்பவர்கள் கைக்கடிகாரம் அணியக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாம்.
விடயம் என்னவென்றால், புடின் ரஷ்யாவின் பிரபலமான உளவுத்துறையில் இருந்தவர் ஆவார்.
ஆக, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல, கைக்கடிகாரத்தில் மறைத்துவைக்கப்பட்டுள்ள, அல்லது பொருத்தப்பட்டுள்ள கருவிகளைப் பயன்படுத்தி தன்னை சந்திக்க வருபவர்கள் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
ஆகவேதான், அவரை சந்திக்கச் செல்பவர்களுக்கு கைக்கடிகாரம் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.