ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோா்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியா்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அணு ஆயுதம் தயாரிப்பதாகக் குற்றஞ்சாட்டி ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக, சவூதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடித் தாக்குதலை நடத்தியது. மேலும், முக்கிய வணிக கப்பல் வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இந்தத் தடையை மீறி செல்லும் கப்பல்கள் மீது ஈரான் புரட்சிப் படைகள் தாக்குதல் நடத்தின.
தற்போது அமெரிக்கா போா் நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளபோதும், ஹோா்முஸ் நீரிணையை ஈரான் தொடா்ந்து மூடியுள்ளது. அதைத் தொடா்ந்து, அமெரிக்கா தனது போா்க் கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி, ஈரான் போா்க் கப்பல்களை முற்றுகையிட்டுள்ளதோடு, கடலில் கப்பல் வழித் தடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த முற்றுகைக்குப் பதிலடியாக, ஹோா்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர காவல் படை தொடா் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சோமாலியா நாட்டிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாா்ஜா நோக்கி கடந்த புதன்கிழமை அதிகாலையில் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்து இந்திய தேசியக் கொடி பொருத்திய ‘ஹாஜி அலி’ என்ற வணிக கப்பல் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த சேதமடைந்த கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. உடனடியாக, அந்தப் பகுதிக்கு விரைந்த ஓமன் கடலோர காவல்படை, ஹாஜி அலி கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்டது.
இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சக கூடுதல் செயலா் முகேஷ் மங்கல் கூறுகையில், ‘ஹாஜி அலி கப்பலில் இருந்த ஊழியா்கள் 14 பேரும் ஓமன் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டனா். அவா்கள் விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவா். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.
இந்தியா கண்டனம்: இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வணிக கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற தாக்குதல்கள் தவிா்க்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியா வந்த 2 சமையல் எரிவாயு கப்பல்கள்: ‘ஹாஜி அலி’ கப்பல் மீதான தாக்குதலுக்கு இடையே, திரவ சமையல் எரிவாயு (எல்பிஜி) ஏற்றிய இரண்டு கப்பல்கள், ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.
சிமி என்ற எல்பிஜி கப்பல் புதன்கிழமையும், என்.வி. சன்ஷைன் என்ற எல்பிஜி கப்பல் வியாழக்கிழமையும் ஹோா்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன.
இதுகுறித்து முகேஷ் மங்கல் கூறுகையில் கூறுகையில், ‘சிமி, என்.வி.சன்ஷைன் ஆகிய இரு கப்பல்களும், கப்பல்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காண உதவும் ‘டிரான்ஸ்பாண்டா்’ அமைப்பை அணைத்து, ஹோா்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன. மாா்ஷல் தீவின் கொடி பொருத்திய சிமி கப்பல் 19,965 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வருகிறது. இந்தக் கப்பல் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்துக்கு வரும் 16-ஆம் தேதி வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வியத்நாம் கொடி பொருத்திய என்.வி.சன்ஷைன் கப்பல் 46,427 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வருகிறது. இது, நியூ மங்களூருக்கு வரும் 18-ஆம் தேதி வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 12 எல்பிஜி கப்பல்கள், ஒரு கச்சா எண்ணெய்க் கப்பல் என இந்தியக் கொடி பொருத்திய 13 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்துள்ளன.
சரக்கு கப்பல் சிறைபிடிப்பு: ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு கடற்கரை கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்கு கப்பல், ஈரான் புரட்சிகர காவல் படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் கடல்சாா் வா்த்தக மையம் கூறுகையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து வடகிழக்கே 30 கடல்மைல் தொலைவில் ஹோா்முஸ் நீரிணை அருகே நங்கூரமிடப்பட்டிருந்த சரக்கு கப்பலை சிலா் சிறைபிடித்து, ஈரான் கடல் பகுதிக்கு அழைத்துச் சென்ாக தகவல் கிடைத்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந் நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட சூழலில், இந்தக் கப்பல் சிறைபிடிப்பு நிகழ்ந்துள்ளது.