;
Athirady Tamil News

நாம் ஏற்றும் சுடர் வெறும் சடங்கு அல்லநீதிக்கான அறவழி போராட்டம்- தவிசாளர் இ.ரூபசாந்தன் .

0

நாவிதன்வெளி – கல்முனை பிரதான வீதியில் சவளக்கடை தாபாலகத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு நாவிதன்வெளி தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றது.

நினைவு சுடரினை ஏற்றி வைத்த பின்னர் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்.

இன்று நாம் ஒரு கனத்த இதயத்தோடு இங்கு கூடியிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஆறாத வடுவாகவும், தீராத துயரமாகவும் நிலைபெற்றிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு வாரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.

இந்த மண்ணுக்காகவும், எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் இறுதி மூச்சு வரை போராடி, முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்துபோன ஆயிரமாயிரம் உறவுகளை இந்த நேரத்தில் மிகுந்த மரியாதையுடனும், வணக்கத்துடனும் நினைவு கூர்கின்றேன்.


முள்ளிவாய்க்கால் என்பது வெறும் இடத்தின் பெயர் மட்டுமல்ல அது தமிழினத்தின் ஒட்டுமொத்த வலி. பசியாலும், தாகத்தாலும் எமது சொந்தங்கள் கொத்து கொத்தாக மடிந்த அந்த நாட்கள், காலம் கடந்தாலும் நம் நினைவுகளில் இருந்து மறையாது. அந்த தியாகங்களை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூருவது என்பது வரலாற்று கடமையாகும்.

உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதியோரம் நின்று நீதி கேட்டுப் போராடும் அவலம் தொடர்கிறது. நாம் செலுத்தும் இந்த சுடர் அஞ்சலி என்பது வெறும் சடங்கு அல்ல; இது நீதி வேண்டிய ஒரு அறப்போராட்டம். உலக நாடுகள் எம் மக்களின் வலியை உணர வேண்டும், நமக்கான அரசியல் தீர்வையும் நீதியையும் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை நாம் இந்த நினைவேந்தல் ஊடாக உரக்கச் சொல்கிறோம் என தெரிவித்தார்.


இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆரியதாஸ தர்மதாஸ நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர்கள், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அ.சுதர்சன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.