2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேள்விக்கு பதில் வழங்கிய பிரதி அமைச்சர் ,
உயர்தரப் பரீட்சை
“உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி ஒருசில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது குறித்துப் பரீட்சைகள் திணைக்களத்துடன் தொழில்நுட்ப ரீதியிலான விரிவான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.
கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் இருந்து நாட்டின் பிரதான தேசிய பரீட்சைகள் இரண்டும் (உயர்தரம் மற்றும் சாதாரண தரம்) கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கால அட்டவணைகள் சீர்குலைந்துள்ளன.
இவற்றை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வராவிட்டால், அது ஏனைய பள்ளிப் பரீட்சைகளையும், பல்கலைக்கழகப் பரீட்சைகளையும் சங்கிலித் தொடராகப் பாதிக்கும்.
எனவே, கடந்த காலங்களில் பிற்போடப்பட்ட தேசிய பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்தி, கல்வித்துறையை வழமைக்குக் கொண்டுவர அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படியே இம்முறை உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடத்தப்படும்.” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.