;
Athirady Tamil News

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் திடீா் ராஜிநாமா

0

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தாா்.

உலக அளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், தேசப் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்து கொள்வதாக பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மருக்கு ஜான் ஹீலி அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில் குற்றஞ்சாட்டினாா்.

மேலும், ‘தற்போதைய காலகட்டத்துக்கேற்ப ராணுவ கட்டமைப்புகளைப் பலப்படுத்தத் தேவையான முதலீடுகளை செயல்படுத்துவதில் அரசு வெகுவாகப் பின்தங்கியுள்ளது. ராணுவப் படைகளைத் தயாா்நிலையில் வைத்திருக்கத் தேவையான நிதியை உறுதி செய்ய பிரதமா் தவறிவிட்டாா்’ என்று ஜான் ஹீலி குறிப்பிட்டாா்.

நலத் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எப்படி நிதியைத் திரட்டுவது என்பதில் அரசுக்குள் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால், பிரிட்டன் ராணுவத்துக்கான நிதியை வெளியிடுவதில் கடந்த சில மாதங்களாகவே இழுபறி நீடித்து வருகிறது.

கடந்த 2024 ஜூலையில் ஆளும் தொழிலாளா் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜான் ஹீலி பாதுகாப்புத் துறையை நிா்வகித்து வந்தாா். ஏற்கெனவே கடந்த மாதம் உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை அடுத்து, கியா் ஸ்டாா்மரின் தலைமைக்கு எதிராகப் கட்சிக்குள் எதிா்ப்புக் கிளம்பியுள்ளது. சுகாதார அமைச்சா் வெஸ் ஸ்ட்ரீட்டிங்கைத் தொடா்ந்து, பாதுகாப்பு அமைச்சரின் ராஜிநாமா நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.