;
Athirady Tamil News

ஜெலென்ஸ்கியிடமிருந்து உயரிய விருதைப் பறித்த ஐரோப்பிய நாடொன்று

0

போலந்தின் ஜனாதிபதி, அந்நாட்டின் உயரிய விருதை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடமிருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளார்.

UPA-வின் நாயகர்கள்
இரண்டாம் உலகப் போரின்போது போலந்து மக்களைப் படுகொலை செய்த ‘உக்ரேனிய கிளர்ச்சியாளர் படை’யின் (UPA) பெயரை ஒரு ராணுவப் பிரிவுக்கு உக்ரேனிய ஜனாதிபதி சூட்டியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலந்தின் க்டான்ஸ்க் (Gdansk) நகரில் உக்ரைனின் புனரமைப்பு குறித்த மாநாடு நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கியின் இந்த முடிவு, அண்டை நாடுகளுக்கு இடையே ஒரு கடுமையான இராஜதந்திர நெருக்கடியைத் தூண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி நவ்ரோக்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உக்ரைனிய ஆயுதப் படைகளின் பிரிவுகளில் ஒன்றிற்கு “UPA-வின் நாயகர்கள்” (Heroes of the UPA) என்று பெயரிட ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்புதல் அளித்ததைக் கருத்தில் கொண்டு… உக்ரைன் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ‘வெள்ளை கழுகு’ (White Eagle) விருதை திரும்பப் பெற நான் முடிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தக் கட்டத்தில் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ள அவர், இந்த முடிவு உக்ரேனிய மக்களுக்கு எதிரானதல்ல. இது போலந்தின் பாதுகாப்புக் கொள்கையின் மூலோபாய திசையில் ஒரு மாற்றத்தையும் குறிக்கவில்லை என்றார்.

ரஷ்யாவிற்கு எதிரானப் போர் முயற்சியில் உக்ரைனுக்கு போலந்து நிர்வாகம் வலுவான ஆதரவை அளித்து வந்தாலும், அகதிகள் குறித்த சலிப்பு, தானிய இறக்குமதி தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது நடந்த படுகொலைகளின் தாக்கம் ஆகியவற்றால், சமீபத்திய ஆண்டுகளில் உக்ரைன் மீதான பொதுமக்களின் மனநிலை மேலும் மேலும் எதிர்மறையாக மாறியுள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத
இந்த நிலையில், போலந்து நிர்வாகத்தின் இந்த முடிவு ஒரு மூலோபாயத் தவறு என்றே உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா குறிப்பிட்டுள்ளார்.

தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக, போலந்து தரப்பு இந்த மோதலை ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பொருத்தமற்ற நிலைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தது வருந்தத்தக்கது என பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், வேறு எந்த நாட்டின் ஜனாதிபதியும் எமது வரலாற்றை எமக்குக் கட்டளையிடப் போவதில்லை என்றார்.

இதனிடையே, ஜனாதிபதி நவ்ரோக்கியின் அரசியல் எதிராளியும், இந்தப் சர்ச்சையைத் தணிக்க முயன்றவருமான போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், இரு ஜனாதிபதிகளும் தங்கள் உணர்ச்சிகளைத் தணித்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பாவில் இருதரப்பு உறவுகள், ஜனநாயகம், அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும், மறுக்க முடியாத மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் காட்டிய உறுதிக்காகவும், முன்னாள் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா 2023-ல் ஜெலன்ஸ்கிக்கு போலந்தின் உயரிய விருதான ‘வெள்ளை கழுகு விருது’ (Order of the White Eagle) வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.