செம்மணியில் அகழ்வு பணிகள் நிறைவு ; மீண்டும் ஜூலையில் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியில் இன்று 19 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 32 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்ற நிலையில் குறித்த விடயம் கண்டறியப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 412 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 409 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று பிற சான்றுப் பொருட்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பினாலான பெரிய வட்ட வடிவிலான பொருளும், கறுப்பு நிற பாசி மணிகளும், அணிகளும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டது
மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்தது. அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் – என்றார்.
