;
Athirady Tamil News

எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!

0

அமெரிக்காவில், நியூ யார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சி மீது ஏறிய காதல் ஜோடி, அங்கு தங்களது காதலை முன்மொழிந்த விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.

ரஷியாவைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, கருப்பு நிற ஆடை மற்றும் முகக் கவசத்துடன் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மீது இருக்கும் இரும்பு அமைப்பின் உச்சியில் ஏறி காதலை வெளிப்படுத்திய விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

உச்சியில் ஏறிய காதல் ஜோடி, ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டு, தங்களது காதலை முன்மொழிந்து அங்கேயே திருமண நிச்சயதார்த்தத்தையும் செய்துகொண்டனர். நிறைவாக ஒரு பேனரை அங்கே அவர்கள் பறக்கவிட்டுவிட்டு மீண்டும் பத்திரமாக தரையிறங்கியிருக்கிறார்கள்.

திரைப்படக் காட்சிகளை விஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ரஷியாவைச் சேர்ந்த 32 வயதாகும் இவான் பீர்க்ஸ், ஏஞ்சலா நிகோலாவிடம் (33) தன்னுடைய காதலை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

தரையில்கூட சிலரால் முழங்கால் போட்டு உட்கார முடியாத நிலையில் நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில், முழங்காலை மடித்து அமர்ந்து, ஏஞ்சலா நிகோலாவிடம் மோதிரத்தை நீட்டி, தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதோடு, திருமணத்துக்கும் முன்மொழிந்தார்.

கிட்டத்தட்ட 1,450 அடி உயரமுள்ள அந்தக் கட்டடத்தின் உச்சியில் குறைந்தது 10 நிமிடங்கள் அவர்கள் இருந்துள்ளனர். அனைத்துக்கும் நிறைவாக, அந்தக் கட்டடத்தின் மிக உயரமான முனையில், அதிகாரத்தின் மீதான காதலை விட அன்பின் சக்தி மேலோங்கும்போது உலகம் அமைதியைக் காணும் (When the power of love beats the love of power the world knows peace) என்று எழுதப்பட்டிருந்த ஒரு பேனரையும் அவர்கள் பறக்கவிட்டனர்.

தங்கள் காதலை உலகமே அறிய வெளிப்படுத்திய அந்த ஜோடி, மிகப் பொறுமையாக, தரைக்கு இறங்கி வந்ததும், அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். காதலைச் சொன்னதற்காக அல்ல, எம்பயர் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைதல், கவனக்குறைவாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல், பொது வெளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல் போன்றவற்றுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் ஜோடியிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.