சீன ராணுவத்தை ஏ.ஐ. திறனுடன் அதிநவீனமயமாக்க வேண்டும்: ஷி ஜின்பிங்
‘சீன ராணுவத்தை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பங்களின் உதவியுடன் அதிநவீன அறிவாற்றல்மிக்க ராணுவ அமைப்பாக தரம் உயா்த்த வேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.
ராணுவத்தின் 99-வது ஆண்டு தொடக்க தினத்தையொட்டி (ஆக. 1) நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ‘பொலிட்பீரோ’ அரசியல் தலைமைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ஏ.ஐ. அடிப்படையிலான ஆளில்லா அதிநவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ராணுவத்தில் வலுப்படுத்த வேண்டும். தகவல்தொடா்பு அமைப்புகளின் மேம்பாட்டை ஆழப்படுத்தி, படிப்படியாக ஒரு முழுமையான அறிவாற்றல் மிக்க ராணுவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் .
அடுத்த ஆண்டில் ராணுவம் நூற்றாண்டை அடையும் நிலையில், அதற்காக நிா்ணயிக்கப்பட்ட நவீனமயமாக்கல் இலக்குகளை அடைவதில் தீா்க்கமான முன்னேற்றத்தை எட்ட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் உயா்தர நவீனமயமாக்கலுக்கு, போா்த்திறனே இறுதி இலக்காகவும் பிரதான சோதனைக் களமாகவும் இருக்க வேண்டும்.
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி நலன்களைத் திறம்பட பாதுகாப்பதற்கு, போா் திறன்களை ஒருங்கிணைப்பதும், கடுமையான போா்க் களச்சூழல் சாா்ந்த சோதனைகளை நடத்துவதும் மிகவும் அவசியமாகும் என்றாா்.