சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!
சௌதி அரேபியாவின் ஜிசான் நகரத்தின் மீது யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவுக்கும் யேமனின் ஹௌதி படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், ஜிசான் நகரத்தில் உள்ள அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இன்று (ஆக. 13) ஹௌதிகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, யேமன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சௌதி அரேபியாவின் மிகப் பெரிய உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அரம்கோவின் மீது 2 ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சௌதி அரசு இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
இத்துடன், யேமனின் வான்வழிப் பாதையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்கும், சதா மற்றும் ஹஜ்ஜா மாகாணங்களில் இறையாண்மையை மீறியதற்காகவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, உலகின் 12 சதவிகித வணிகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக சௌதி அரேபியாவின் கப்பல்கள் பயணிப்பதற்கு ஹௌதிகள் தடை விதித்துள்ளனர்.
ஈரான் மீதான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சௌதி மீது ஹௌதிகள் தடை விதித்துள்ளதால் இருதரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.