;
Athirady Tamil News

தீவகம் அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்தரைக்கு தீவைத்த நபர் ஊர்காவற்றுறை பொலிஸில் ஒப்படைப்பு!

0

யாழ் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடைப்பட்ட பகுதியில் உள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதால் பல்வேறு அசௌகரியங்கள் உருவாகி இருந்தன.

இதனால், அப்பகுதியில் 2019 ல் நடுகை செய்யப்பட்ட மரக்கன்றுகள்பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாவதுடன், புகை மற்றும் தீ பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

புற் தரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை அடையாளம் காணவோ கைது செய்யவோ முடியாத நிலையில், வேலணை பிரதேச சபை நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது பிரதேச சபை ஊழியர்களால் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.