;
Athirady Tamil News

ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!

0

ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் உள்பட சுமார் 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அணுஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா – இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய கூட்டுத்தாக்குதலைத் தொடந்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் கையொப்பமான இடைக்கால ஒப்பந்தத்தில் உடனடி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மேலும், 60 நாள்களுக்குள் விரிவான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, ஹோர்முஸ் நீரிணையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றி, கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க ஈரானும்; கடல்வழி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளை விலக்கி, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு தொடர்பான கருத்து வேறுபாட்டால் இந்த ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஈரான் மீது நேற்றிரவு (செப். 1) அமெரிக்க ராணுவத்தினர் அதிரடியாக வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள், கிட்டத்தட்ட 100 இடங்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானிய புரட்சிக்கரப்படையினரும் தாக்குதலைத் தொடர்ந்தனர். சுமார் 25-க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி நடத்தியத் தாக்குதலில் ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு மத்தியிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற 40-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்க ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்ததாக அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.