நியூ யார்க்கில் பள்ளி மாணவர்கள் ஏஐ பயன்படுத்த தடை!
நியூ யார்க் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செய்யறிவு (ஏஐ) பயன்படுத்த மேயர் ஸோரான் மம்தானி ஸோரன் தடை விதித்துள்ளார்.
குழந்தைகளின் தனித் திறமைகள், சுயமாக சிந்திக்கக்கூடிய திறன், மனநலன் ஆகியவற்றை பாதிக்கும் சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது அடுத்த ஓராண்டுக்கு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட சில தேவைகளுக்காக ஏஐ செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆசிரியர்கள் பாடங்களைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்காக ஏஐ செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ள விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி வகுப்பறைகளில் திரையை பார்க்கும் நேரத்தை 45 நிமிடங்கள், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்துமாறு நியூயார்க் கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக மம்தானி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், வளரவும் ஆசிரியர்களின் தொடர்பு அவசியம். சக மாணவர்களுடன் இணைந்து திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ஆசிரியர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், அதேவேளையில் கடினமான சிக்கல்களைத் தாங்களே எதிர்கொண்டு தீர்க்கவும் வேண்டும்.
செய்யறிவு சார்ந்த தொடக்கக் கல்வி என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அவசியமானதும் கூட என்று நாம் நம்ப வேண்டும் என்று தொழில்நுட்பத் துறை விரும்புகிறது. ஆனால், நாங்கள் அதை அவ்வாறு பார்க்கவில்லை. அதனால்தான், மழலையர் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ யன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், அடுத்த ஓராண்டு காலத்திற்கு இத்தொழில்நுட்பத்தின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.