;
Athirady Tamil News

மருத்துவ மேற்படிப்பு: வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் – சென்னை ஐகோர்ட்டு..!!

0

மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவரிடமும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று மருத்துவ படிப்பு தேர்வு குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்பட ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வுக்குழு வெளியிட்டது. இந்தப் பட்டியலை ரத்து செய்து, தங்களை கலந்தாய்வில் அனுமதித்து மாணவர் சேர்க்கை வழங்க கோரி ஏழு பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அளித்த வெளிநாடு வாழ் இந்தியர் என்ற சான்றிதழ்கள் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டதாலும் குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெறாததாலும் இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களும் சரி பார்க்கப்பட்டனவா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர்கள் ஏழு பேரின் சான்றிதழ்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டதாக தேர்வுக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அடுத்த கல்வியாண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்க வேண்டும் என்று மருத்துவ தேர்வு குழுவுக்கு உத்தரவிட்டார். மேலும் போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கலாம் என்றும் கூறினார். இந்த வழக்கை பொறுத்த வரையில் ஏழு பேரில் இருவருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கிடைத்து விட்டதால் அவர்களுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. மீதமுள்ள ஐந்து பேரில், போலி சான்று அளித்த இருவரின் விண்ணப்பங்களையும், குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவரின் விண்ணப்பத்தையும் நிராகரித்தது சரி என உத்தரவிட்ட நீதிபதி, மற்ற இருவரையும் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.