;
Athirady Tamil News

பிரதமர் மோடி ஜப்பான் உள்பட 3 நாடுகளுக்கு பயணம்!

0

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 6 நாட்களில் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் இந்த பயணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது:- ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் அந்த நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதற்காக அவர் வருகிற 19-ந் தேதி 3 நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார். அங்கு ‘ஜி-7’ உச்சி மாநாட்டின்போது ‘ஜி-7’ நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் நிலையான கிரகத்தின் செழிப்பு போன்ற தலைப்புகளில் பிரதமர் மோடி பேசுவார். அதோடு உணவு, உரம் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் அவர் உரையாற்றுவார். மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்பட மாநாட்டில் பங்கேற்கும் சில தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா நாட்டுக்கு செல்கிறார். அங்கு 22-ந் தேதி தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவுடன் இணைந்து இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் 3-வது உச்சி மாநாட்டை நடத்துவார். அதை தொடர்ந்து அன்றைய தினமே பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்வார். அங்கு சிட்னி நகரில் நடைபெறும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பயணத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிசுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தும் மோடி, 23-ந் தேதி சிட்னி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுவார். இவ்வாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.