பாகிஸ்தானில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் குவெட்டாவை தளமாகக் கொண்ட செய்தித்தாள் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் பலூச். சனிக்கிழமை இவரது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் அவரைக் கடத்த முயன்றுள்ளனர்.
ஆனால் அதை எதிர்த்து போராடிய அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். கொலை குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு பலூச்சின் மூத்த மகனும் கடத்தப்பட்டு பின்னர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் கூட்டாட்சி பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.