;
Athirady Tamil News

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

0

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் சமீப நாள்களில் மிகவும் தீவிரமடைந்துள்ளனா். இதுபோன்ற தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்ட சரண்டா வனப் பகுதியில் மாவோஸ்ட்கள் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஜார்கண்ட் மாநில காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கொண்ட கூட்டுக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் சிலா், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினரின் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி அமித் ஹன்ஸ்டாதா கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து அமித் ஹன்ஸ்டா உடல் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். தொடர்ந்து தப்பியோடியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது .

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதியான அமித் ஹன்ஸ்டா, பொகாரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஹன்ஸ்டா, மேற்கு சிங்பூம், செரைகேலா-கர்சவான் மற்றும் குந்தி மாவட்டங்களின் மண்டலத் தளபதியாக கடந்த பத்தாண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும், இவரை குறித்து தகவல் அளிப்போருக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள், காவல் நிலையங்கள் மீது தாக்குதல், சாலை கட்டுமானம் மற்றும் பிற அரசுத் திட்டங்களைத் தடுத்தது, காவலர்கள் 12 பேர் கொலை, ஆயுதக் கொள்கைகள் என அமித் ஹன்ஸ்டா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் வரை, ஜார்க்கண்ட் முழுவதும் பாதுகாப்புப் படையினருடன் நடந்த 14 துப்பாக்கிச் சண்டைகளில் 21 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி போஸ்டா வனப் பகுதியில் நடந்த மோதலில் நக்சல் தளபதி அருண் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2024-25 இல் அண்டை மாநிலமான சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 400-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஜூன் மாதம் தெரிவித்தார்.

2024 இல் சத்தீஸ்கர் முழுவதும் 217 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

2026 மார்ச் 31-க்குள் மாவோயிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.