;
Athirady Tamil News

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

0

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

உலகின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமும், ஆர்ஜென்டீனா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, இந்தாண்டு இறுதியான டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

டிசம்பர் 13 ஆம் தேதி இந்தியா வரும் மெஸ்ஸி, மூன்று நாள்கள் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதில், தில்லி, மும்பை, கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

தகவலறிந்த வட்டாரங்களின் கூற்றின்படி, தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை(செப்.17) தன்னுடைய 75 வது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார். அவருக்குப் பரிசளிக்கும் விதமாக, தன்னுடைய கையொப்பமிட்ட ஜெர்ஸி ஒன்றையும் பரிசளித்திருக்கிறார் மெஸ்ஸி.

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்றிருந்தபோது தான் அணிந்திருந்த ஆர்ஜென்டீனா அணியின் ஜெர்ஸியில் கையொப்பமிட்டு அதனை பரிசாக அளித்துள்ளார் லியோனல் மெஸ்ஸி.

இதுகுறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நவம்பர் மாதம் கேரளத்தில் நடைபெறும் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணி விளையாடவிருக்கிறது. இந்த அணியை மெஸ்ஸி தலைமைத் தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை நவம்பர் மாதம் போட்டி இறுதி செய்யப்பட்டால், இரண்டு மாதங்களில் இரண்டு முறை மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தருவார் என்றும், இது அவரது ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.