;
Athirady Tamil News

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

0

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதற்கிடையே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினரை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 68,000 -க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில் மேலும் உணவு, தண்ணீர் இன்றி அங்குள்ள மக்கள் தினமும் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

மனிதாபிமானமற்ற முறையில் முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் , இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளார். இதற்கு ஹமாஸ் ஒப்புதல் தெரிவிக்கும்பட்சத்தில் விரைவில் போர் நிறுத்தம் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு இடையே காஸா நகரம் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

காஸா மக்களுக்கு கடைசி எச்சரிக்கை என்று கூறி இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இன்றைய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியானதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஸா மக்களுக்கு உணவு, உடைமைகள், மருந்துகள் கொண்டுவரும் சமூக ஆர்வலர்களின் கப்பலை இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தி வருகிறது. குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பின் கடைசி கப்பலையும் இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.