;
Athirady Tamil News

கிளிநொச்சியில் ‘கிளி முயற்சியாளர் – 2025’ விற்பனைக் கண்காட்சி ஆரம்பம்!

0

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், கிளி முயற்சியாளர் – 2025 தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனைக் கண்காட்சி இன்று(17.10.2025) வெள்ளிக்கிழமை காலை 08.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றிற்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் முகமாகவும் குறித்த விற்பனைக் கண்காட்சி இன்றும்(17) நாளையும் (18) கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள கிளி முயற்சியாளர் சந்தையில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பதில் உதவிப் பணிப்பாளர் ச.சசீபன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதோடு, சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் , கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) அஜிதா பிரதீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த விற்பனைக் கண்காட்சியில் உணவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், வியாபார ஆலோசனை, தோற்பொருள் உற்பத்திகள், விவசாய உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், அழகுக் கலை தொடர்பான சேவைகள் முதலான பல்வேறு முயற்சியாளர்கள் பங்கேற்றுள்ளதுடன் இதனைப் பார்வையிட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து பயன்பெறுமாறும் கிளிநொச்சி மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள கிளி முயற்சியாளர் சந்தையில் சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தினமும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.