;
Athirady Tamil News

அதிர்வலையை ஏற்படுத்திய பெண் டாக்டர் தற்கொலை வழக்கு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

0

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது பெண் டாக்டர் ஒருவர் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் துணை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். அவர் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஓட்டல் அறையில் கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முன்பு அவர் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதி வைத்திருந்தார்.

அதில் பல்தான் நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே மற்றும் பல்தானில் தான் வசித்து வந்த அடுக்குமாடி கட்டிட வீட்டின் உரிமையாளரின் மகனும், சாப்ட்வேர் என்ஜினீயருமான பிரசாந்த் பங்கரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தன்னை 4 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பிரசாந்த் பங்கர் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பெண் டாக்டர் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த 4 பக்க பரபரப்பு கடிதமும் சிக்கியது. அதில், சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும், கைதான கைதிகளுக்கு போலி உடல் தகுதி சான்று வழங்கும்படி எம்.பி., போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தியது பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

மராட்டியத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் நேற்று முன்தினம் காலை சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்த் பங்கரை புனேயில் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விசாரணைக்காக போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

முக்கிய குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாக இருந்தார். அவருக்கு போலீசார் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருவதாக பெண் டாக்டரின் உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே, பல்தான் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.