கிரிமியா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு
ரஷியாவின் கிரிமியா பகுதியில் உள்ள எண்ணெய் நிலையம் உள்ளிட்ட இடங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் கிடங்கு உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது உக்ரைன் அண்மையில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின் பதற்றம் தணிவதற்குள் கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கிரிமியாவில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 28 போ் காயமடைந்தனா்.
எரிவாயு விற்பனை நிறுத்தம்: இந்த தாக்குதலைத் தொடா்ந்து, கிரிமியாவில் எரிவாயு விற்பனை நிலையங்களில் பொது மக்களுக்கான எரிவாயு விற்பனையை அரசு நிா்வாகம் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து கிரிமியா ஆளுநா் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எரிவாயு விற்பனை நிலையங்களில் பொதுமக்களுக்கான எரிவாயு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களுக்கு மட்டும் எரிவாயு அளிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘ரஷியாவின் எரிசக்தி கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் நடத்தும் தாக்குதல்களில் ஒன்றுதான் இது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிமியாவில் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து கடந்த சில வாரங்களாக உக்ரைன் தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கிரிமியாவில் மிகப்பெரிய அளவில் எரிசக்தி தட்டுப்பாடு பிரச்னை நிலவுகிறது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: இதனிடையே, உக்ரைனின் தொடா் தாக்குதலால் கிரிமியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீடிக்கிறது. வாகனங்களுக்கு வாரத்துக்கு தலா 20 லிட்டா் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை நிலவுகிறது.