;
Athirady Tamil News

ரஷிய . எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

0

கோசேலி,

ரஷியா–உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் இதுவரை சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், ரஷிய எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில், ரஷியாவைச் சேர்ந்த கைரோஸ் என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பல் கருங்கடலில் போஸ்பரஸ் ஜலசந்தியில் நுழையும் இடத்திற்கு அருகில் சென்றபோது, அதன் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. உடனே மீட்புப்படையினர் விரைந்து சென்று, கப்பலில் சிக்கித் தவித்த 25 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர்.

இந்த தாக்குதல் நடந்த சில நேரத்திற்குப் பிறகு, கருங்கடலில் பயணித்து கொண்டிருந்த ரஷியாவின் எண்ணெய் கப்பலான விராட் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கப்பல் மீது நீரில் செல்லக்கூடிய டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. உடனே கப்பலில் இருந்த மாலுமிகள் தாக்குதல் குறித்து தகவலை அனுப்பினர்.

அந்த தகவலில்: “இது விராட். உதவி தேவை. டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மே டே, மே டே” என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலின் போது அந்தக் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. அக்கப்பலில் இருந்த 20 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரஷிய கப்பல்கள் மீதான டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. இந்தக் கப்பல்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது மீறப்பட்டதால் நீரில் செல்லக்கூடிய டிரோன் மூலம் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.