;
Athirady Tamil News

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி

0

மெக்சிகோ நாட்டின், மத்திய மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் அகாபுல்கோ நகரத்திலிருந்து நேற்று (டிச. 15) 8 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என 10 பேருடன் தனியாருக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் பயணம் மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, விமானம் சான் மெடியோ அடென்கோ எனும் பகுதியின் அருகில் வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில், பலியான 7 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும், மாயமான 3 பேரின் நிலைக்குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் விமானி, அங்குள்ள கால்பந்து விளையாட்டுத் திடலில் விமானத்தைத் தரையிறக்க முயன்றதாகவும், அங்குள்ள ஒரு கட்டடத்தின் மீது மோதி தீப்பற்றியதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து மெக்சிகோ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தீப்பற்றிய இடங்களிலிருந்து சுமார் 130-க்கும் அதிகமான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டதாக, சான் மெடியோ அடென்கோவின் மேயர் அனா முனிஸ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.