பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல நாம் – நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கை
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தவிசாளர் சபையில் முன்வைத்த போது, தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் எமது கட்சியின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு எழுந்தது.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எமது நிலைப்பாடு:
இந்தக் கொடிய சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜே.வி.பி (JVP) / தேசிய மக்கள் சக்தி தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் போராடி வந்துள்ளது.
பழைய சட்டத்தை நீக்கும் அதேவேளை, நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது.
இந்தச் புதிய சட்டம் தொடர்பில் குறைகளைக் கண்டறிவதற்கும், திருத்தங்களை முன்வைப்பதற்குமான போதிய கால அவகாசத்தை அரசு வழங்கி மக்களின் கருத்துக்களைக் கோரியிருந்தது.
புதிய சட்டமூலம் என்ன சொல்கிறது, அதில் உள்ள சரத்துகள் என்ன என்பதைப் பற்றி எவ்வித அடிப்படை அறிவும், வாசிப்பும் இன்றி, வெறுமனே அரசியல் இலாபத்திற்காக ஒரு பிரேரணையை நிறைவேற்றுவது முற்றிலும் தவறானது. இதனாலேயே குறித்த பிரேரணையை சபையில் எமது கட்சி எதிர்த்தது.
நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல; மாறாக, எவ்வித வாசிப்புமின்றி பொறுப்பற்ற முறையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையையே எதிர்த்தோம்.
உண்மை நிலையினை மக்கள் மன்றத்திற்குத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.