;
Athirady Tamil News

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! – டிரம்ப் எச்சரிக்கை!

0

கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயலாகக் கருதப்படும் சௌத் பார்ஸ் எரிவாயு வயல் மீது புதன்கிழமை (மார்ச் 18) இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு மையத்தின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய்க் கப்பல்கள் பயணிக்க முடியாமல் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் ஈரானில் உள்ள சௌத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதுமாகத் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.