;
Athirady Tamil News

கூட்டுப் பாலியல் வன்கொடுமை ; கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்

0

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) நேற்று வியாழக்கிழமை (26) கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ 2022இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது காயங்களால் பாதிக்கப்பட்டதோடு, அவரது இடுப்புக்கு கீழ்ப் பகுதி முழுவதுமாக செயலிழந்துபோயுள்ளது.

கருணைக்கொலை மூலம் உயிரிழக்கும் உரிமை
அதனையடுத்து, நோலியா காஸ்டிலோவின் கோரிக்கைக்கு அமைய, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றம் கருணைக்கொலை மூலம் உயிரிழக்கும் உரிமையை அந்த இளம்பெண்ணுக்கு வழங்கி அனுமதித்தது.

நோலியாவின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் வழங்கிய அனுமதியின்பேரில், நேற்று மாலை கருணைக்கொலை மூலம் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நான் அமைதியாக விரும்புகிறேன். எனது துன்பத்தை நிறுத்த விரும்புகிறேன்” என தனது தந்தையிடம் கூறிய நோலியாவின் வார்த்தைகள், சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தன்னை கருணைக்கொலை செய்யுமாறு நோலியா கோரியபோது, அதை ஏற்க மறுத்த அவரது தந்தைக்கு ஆதரவாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் முன்வந்தன. துன்பத்துக்கு மரணம் தீர்வாகாது என்றும் அரசு பராமரிக்கத் தவறியதாலேயே அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்து வந்தன.

அந்த அமைப்புகளின் ஆதரவுடன், மகளுக்கான கருணைக்கொலைக்கு எதிராக, தந்தை எழுப்பிய சட்ட ரீதியான மறுப்புரைகளால் கருணைக்கொலை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

தன் மகளுக்கு ஆளுமைக் குறைபாடு இருந்ததாகவும் அது அவரது முடிவெடுக்கும் திறனைப் பாதித்துள்ளதாகவும் தந்தை வாதிட்டார். மக்களினது, குறிப்பாக, மிகுந்த பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்களை பாதுகாப்பது அரசின் கடமை. மனநலப் பிரச்சினைகள் உள்ள ஓர் இளம்பெண்ணின் விடயத்தில் இது பொருந்தும் என்றும் அவர் எதிர்வாதத்தை முன்வைத்திருந்தார்.

அதனையடுத்து, 18 மாதங்களாக பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு நோலியாவும் அவரது தந்தையும் முகங்கொடுத்து வந்த நிலையிலேயே, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நோலியாவுக்கு கருணைக்கொலையை நிறைவேற்ற இணங்கித் தீர்ப்பளித்தது.

ஸ்பெயினில் கருணைக்கொலை சட்டம் 2021இல் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், முதல் முறையாக ஒரு நீதிபதி, தீர்ப்பளிப்பதற்காகவே ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றதென்றால், அது இந்த வழக்காகத்தான் இருக்கமுடியும் எனவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.