;
Athirady Tamil News

ஹார்மூஸ் ஜலசந்தி அல்ல… இனி டிரம்ப் ஜலசந்தி; இது தவறுதலான செய்தி அல்ல என டிரம்ப் பேச்சு

0

புளோரிடா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஈரானை குறிப்பிட்டு அவர்கள், டிரம்ப் ஜலசந்தியை திறக்க வேண்டும். நான் ஹார்மூஸ்சை கூறினேன் என பேசியதும் கூட்டத்தில் இருந்து சிரிப்பலை எழுந்தது.

அவர் தொடர்ந்து, மன்னிக்கவும். அது ஒரு பயங்கர தவறு. நான் தவறுதலாக கூறி விட்டேன் என பொய்யான செய்தி வெளிவரும். தற்போது தவறுதலாக நான் எதுவும் கூறவில்லை. அதிக அளவிலும் இல்லை என்றார். இதனால், வருங்காலத்தில் ஹார்மூஸ் ஜலசந்திக்கு பதில், அது டிரம்ப் ஜலசந்தி என அழைக்கப்படும் என்பதே உண்மையான செய்தி என குறிப்பிடுவது தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பேசும்போது, நானும் அயதுல்லாவும் இணைந்து அந்த ஜலசந்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம். அதற்கான சாத்தியம் உள்ளது. போருக்கான ஒரு தீர்வாக இது இருக்கும் என கூறினார். அதன்பின்னர் அவர், ஒப்பந்தத்திற்காக ஈரான் எங்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிறது என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரானோ, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறுகிறது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் முதலில் கூறினார். பின்னர் இந்த தாக்குதல் நிறுத்தம் ஏப்ரல் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.