;
Athirady Tamil News

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை… வெற்றிகரமாகச் சோதனை நடத்திய வட கொரியா!

0

அமெரிக்க நிலப்பரப்பைத் தாக்கும் அதிக உந்துவிசை கொண்ட ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ராணுவ பலத்தை அதிகரிக்கும் விதமாக ஆயுதங்களுக்கான அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

இந்தச் சோதனையின் மூலம் அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் ஏவுகணைகளை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் நடக்கும் போரைக் குறிப்பிடும் விதமாக அமெரிக்காவை உலகளாவில் “அரச பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு” செய்வதாகக் குற்றம் சாட்டி, தனது நாட்டின் அணுசக்தி கட்டமைப்பை உறுதியாக நிலைநிறுத்துவதாக வட கொரிய அதிபர் கிம் நாடாளுமன்றத்தில் சில நாள்களுக்கு முன் உரையாற்றினார். அதன் பின்னர், இந்தச் சோதனை நடைபெற்றதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பரில் இதேபோன்று நடத்தப்பட்ட திட எரிபொருள் ஏவுகணைச் சோதனையில் பதிவான உந்துவிசை சுமார் 1,971 கிலோ டன்களாக இருந்தது. தற்போது, நடத்தப்பட்ட சோதனையில் ஏவுகணையின் அதிகபட்ச உந்துவிசை 2,500 கிலோ டன்களாக உயர்ந்துள்ளதாகவும் புதிதாக மேம்படுத்தப்பட்ட இந்தச் சோதனையை கிம் பார்வையிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை எங்கு நடைபெற்றது என்று குறிப்பிடப்படாத நிலையில் ஒரே ஏவுகணையில் பல்வேறு குண்டுகளைப் பொறுத்தும் விதமாக அதன் உந்துவிசை மற்றும் சக்தியை அதிகரித்து அமெரிக்காவின் பாதுகாப்பு அரணைத் தாக்குவதற்கு இவை பயன்படுத்தப்படலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் ஐந்தாண்டு ராணுவ பலத்தைப் பெருக்கும் திட்டத்தின் கீழ் இந்தத் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் போர்த் திறன் சார்ந்த ராணுவ வலிமையை அதிகரிக்கும் விதமாக சமீபத்திய சோதனை முக்கியமானது என கிம் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.