;
Athirady Tamil News

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

0

ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 இ மற்றும் ஏ 10 ரக போர் விமானங்களை, ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் போரில் ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் 12,300-க்கும் அதிகமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனிடையே, ஈரானின் தென்மேற்கு மாகாணங்களின் மீது தாக்குதல் நடத்த முயன்ற அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 இ ஸ்டிரைக் ஈகிள் ரக போர் விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மற்றொரு தாக்குதலில் அமெரிக்காவின் ஏ 10 ரக போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, அந்த போர் விமானங்களில் இருந்து அவசரமாக வெளியேறிய விமானிகளில் ஒருவரை அமெரிக்க மீட்புப் படைகள் மீட்டுள்ளன. மேலும், மற்றொரு விமானத்தின் விமானியைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இத்துடன், தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், உயிர் பிழைத்த விமானியைக் கண்டுபிடித்து ஒப்படைக்க அந்நாட்டு அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் அதிக தூரம் வேகமாகப் பயணித்து தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்தவை. இறுதியாக, கடந்த 2003 ஆம் ஆண்டு இராக் மீதான படையெடுப்பின்போது அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.