காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!
காஸாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். இதனை, காஸா பாதுகாப்புத் துறை மற்றும் அங்குள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளன.
காஸா நகரின் கிழக்கில் உள்ள நகரப் பகுதியில் இந்த டிரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 4 பேர் பலியான நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதக் குழுக்களின் நடமாட்டம் பற்றிய தகவல்கள் கிடைத்ததால் அங்கு தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தம் அமலில் இருக்கும்போதும் இஸ்ரேல் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதுவரை அவ்வாறு நடத்தியத் தாக்குதல்களில் 715 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
போர்நிறுத்தம் அமலான நாள் முதல் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 5 பேர் ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸாவில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பலியானோர் பற்றிய புள்ளிவிவரங்களைச் சரிபார்ப்பது பற்றியும் அங்குள்ள நிலைமையைச் சொல்வது பல செய்தி நிறுவனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த போர் பெருமளவு நிறுத்தப்பட்ட போதிலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேலும் ஹமாஸும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.